Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எடப்பாடி பழனிசாமிக்கு அடிக்கல் நாயகன் பெயர் வைக்கலாம் -கனிமொழி தாக்கு

மார்ச் 01, 2021 04:03

திருப்பத்தூர்:திருப்பத்தூரில் நகர தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது,தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி சுகத்திற்காக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் தமிழகத்தின் மொழி, உரிமை, பெருமை, மற்றும் அ.தி.மு.க.வை கட்சி, ஆகியவற்றை அடகு வைத்துள்ளார்.

அ.தி.மு.க. வில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமானாலும் நீக்க வேண்டுமானாலும் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும் தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க. அரசு பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. தன்மானத்தை, சுயமரியாதையை இழந்த ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எனவே இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தெரிவிக்கும் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது இந்த திட்டங்களை ஏன் கொண்டு வரவில்லை.அறிவிப்புகள் மட்டுமே அவர் வெளியிடுவார். அடுத்ததாக, அறிவித்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். பிரதமரை மதுரைக்கு அழைத்து வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதுவரை அங்கு ஒரு செங்கல் கூட கட்டப்படவில்லை.அடிக்கல் மட்டும் நாட்டுவார். ஆனால் எந்த ஒரு திட்டமும் நிறைவேறாது. அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு அடிக்கல் நாயகன் என பெயர் வைக்கலாம் என்று கனிமொழி பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்